Friday, November 9, 2018

மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி

Source : Malai Malar, Mar 14-18, 2018






தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அழகும், வனப்பும் கொண்ட அருமையான கிராமம் இளையரசனேந்தல். இங்குத் தான் சித்தர் மகான் பேப்பர் சுவாமிகள் அருள்புரிந்து, அடங்கி நல்லருள் வழங்கி வருகிறார்.


அது என்ன பேப்பர் சுவாமி?

இவர் எப்போதும் தனது கைகளில், கீழே கிழிந்து கிடக்கும் செய்தித் தாள்களை சேகரித்து, அதைக் கொண்டு சிலவற்றை வாசிப்பார். அது மறுநாள் நாளிதழில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்திருக்கும். எனவே தான் இவரை அந்தப் பகுதி மக்கள்பேப்பர் சுவாமிகள்என்று அழைத்தனர்.

பேப்பர் சுவாமிகள் ஆரம்ப காலங்களில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் இவரது இயற்பெயர் என்ன? இவர் எதற்காக இளையரசனேந்தல் வந்தார்? என்பது அறியப்படவில்லை.


சித்தர்களின் பிறப்பு ரகசியம் யாராலும் அறிய முடியாது என்பார்கள். அதுபோலத் தான் பேப்பர் சுவாமிகள் பெயர், பிறந்த காலம், பெற்றோர், பிறப்பிடம், வயது ஆகியவை தெரியவில்லை.


இவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர், மாநிறத்தவர். ஜிப்பா சட்டையும், வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்து இருப்பார். விரல்களில் மோதிரம் காணப்படும். கண்கள் வடிவில் சிறியதாக இருக்கும். இதனால் இவரைப் பார்ப்பவர் களுக்கு, இவர் சாமியார் போலவே தெரியமாட்டார். ஆனாலும் அரிய சக்திக் கொண்டவர்.

இவருக்கு தாடியும், ஜடைமுடியும் கிடையாது. அதே வேளையில் மொட்டை தலையுடனும் காணப்படமாட்டார்.

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பேப்பர் சுவாமிகள், சித்தன் போக்கு சிவன் போக்கு என அலைந்து திரிந்து கொண்டிருக்க வில்லை. ஓரிடத்திலேயே அமர்ந்து இருப்பவர். இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோவில், குன்னக்குடி பிள்ளையார் கோவில், கீழ இலஞ்சியில் உள்ள நாராயண சுவாமி கோவில் போன்ற இடங்களில் மான் தோல் மீது அமர்ந்து கடுந்தவம் புரிந்துள்ளார்.





[Pic - Left:சாதாரண தோற்றத்தில் பேப்பர் சுவாமி      






Pic -Right: இலஞ்சியில் பேப்பர் சுவாமி தவம் செய்த விநாயகர் கோவில்]



இங்குள்ள சித்திரா நதியில் மூழ்கி தவம் செய்யும் இவர், 2 மணி நேரம் கழித்து தான் வெளியே வருவாராம். இதை சுவாமியின்ஜல ஜெபம்என கூறுகிறார்கள்.

இவர் இயக்கியாடும் பெருமாள் ஜீவசமாதி, தென்காசி மருதப்ப ஞானியார் ஒடுக்கத்தலம், தென்காசி இடைக்கால் முப்புடாதி அம்மன் கோவில் உள்பட பல பகுதியில் கடுந்தவம் புரிந்துள்ளார்.

இலஞ்சியில் இருந்த காலத்தில், துப்புரவுத் தொழிலாளரான கருப்பன் என்பவரின் வீட்டுக்கு தனது சீடர் ஒருவரோடு சென்றார் பேப்பர் சுவாமிகள். கருப்பன் வீட்டில் உணவு உண்ட சுவாமிகள் தனது சீடரையும் சாப்பிடச் சொன்னார். அவர் முகம் சுளிக்கவே.. ‘உனக்கு வசதி இருந்தாலும் மாதத்தில் பாதி நாள் உணவு கிடைக்காது போ' என சாபம் விட்டார். அதே போல் அவர் பிற்காலத்தில் வறுமையில் வாடியுள்ளார். எனவே சாமியிடம் வரம்வேண்டும் என வேண்டுபவர்கள், அவரிடம் சாபம் வாங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்களாம்.

பேப்பர் சுவாமிகள் பல சித்தர்களோடு தொடர்பு கொண்டவராகவே வாழ்ந்துள்ளார்.



அம்பலவாண சுவாமிகள் என்ற சிவகிரி சுவாமிகள், இலஞ்சி முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிவபூஜை செய்து தவம் இருந்தார். இவரை அடிக்கடி சந்தித்தார் பேப்பர் சுவாமிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பேப்பர் சுவாமிகள் தவமேற்றும் போதெல்லாம் அவரை காண வந்து செல்வார் என்றும் பலர் கூறுகிறார்கள்.

பேப்பர் சுவாமிகள் தனது அருள் மேம்பட, ஒரு முறை ஒரு விஷயத்தைச் செய்தார்.

மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி


ஒரு காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையே மழையின்றி வறண்டது. குற்றாலச் சாரலின் மூலமாக எப்போதுமே குளுகுளுவென காணப்படும் இலஞ்சிக்கும் அதே நிலை தான். குளங்களில் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பொய்த்தது.

தென்றல் தவழும் புண்ணிய பூமியில் மழை இன்றி வறண்டால் விவசாயிகள் பரிதவித்தனர்.

விவசாயிகள் சுவாமியிடம் ஓடோடி வந்து, ‘சுவாமி! வயக்காட்டுல நாத்து நட்டாச்சு.. ஆனால் மழையும் இல்லை.. தண்ணியும் இல்லை. நீங்கதான் அருள் புரியனும்' என்றனர்.

சுவாமி அவர்களை மேலும் கீழுமாக பார்த்தார்.

மழை தண்ணி வரும்டா, பாத பூஜை நடத்தி.. ஊர்ல பட்டண பிரவேசம் சுத்தி வாங்கடா.. மழை பெய்யும்' என்றார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு பாடலையும் பாடினார். அவர் பாடிய பாடல் இதுதான்.

இடி இடிக்க மழை பெய்ய

இடும்பன் குளம் தத்தளிக்க

குடை பிடிச்சு வருவேன்

குடமயிலே தூங்கி டாதே..' என்று போனது அந்தப் பாடல்.

பேப்பர் சுவாமிகள் கூறியதை விவசாயிகள் ஊர் மக்களிடம் கூறினர். ஊர் கூடியது. சுவாமிக்கு பாத பூஜையும், பட்டணப் பிர வேசமும் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை பேப்பர் சுவாமி களிடம் கூறினர். மேலும் இந்தப் பூஜையை யாரை வைத்து செய்வது? என்றும் அவர்கள் கேட்டனர்.

அதற்கு பேப்பர் சுவாமி கள், ‘பங்களாக்காரனை வைத்து செய்யுங்கள்என்றார்.

அவர் குறிப்பிட்டது, இளையரசனேந்தல் ஜமீன் நரசிம்ம அப்பாசாமி.

ஜமீன்தாருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் என்றாலும், அவருக்கு சொந்தமான பல நிலபுலன்கள் இலஞ்சி பகுதியில் இருந்தது. மழை இல்லாமல் அதை நம்பியிருந்த விவசாய தொழிலாளிகளும் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே மழைக்காக எதுவும் செய்ய தயார் என்ற நிலையில் ஓடோடி வந்தார் ஜமீன்தார்.

தன்னை வணங்கி நின்ற ஜமீன்தாரை மேலும் கீழுமாக பார்த்த பேப்பர் சுவாமிகள், ‘நீ.. எனக்கு பாத பூஜை செய்யப் போகிறாயா? இது லேசான வண்டி கிடையாதுடா. இந்த வண்டி முதலில் கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் சமாதி ஆகியிருக்கு. இரண்டாவதாக கரூருக்குப் பக்கத்தில் உள்ள நெரூரில் சமாதி ஆகியிருக்குஎன்றார்.

சித்தர்கள் பல இடங்களில் அடங்குவார்கள். மக்கள் சேவைக்காக மீண்டும் பிறவி எடுப்பார்கள். ராமதேவர் தான் பிற்காலத்தில் தேரையராக பிறந்தார். நெல்லை மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரண மலையில் தான் தேரையர் அடக்கமானார். பேப்பர் சுவாமிகளும் ஏற்கனவே இரு இடங்களில் ஜீவ சமாதி அடைந்து, மூன்றாவதாக இங்கே அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் பலரும் வியந்து நின்றனர்.

தொடர்ந்து பேப்பர் சுவாமிகள், ‘இன்று மட்டும் நீ.. பூஜை நடத்தினால் போதாது, 21 வருடம் தொடர்ந்து பாத பூஜை நடத்தவேண்டும். முடியுமா?' எனக் கேட்டார்.

நடத்துகிறேன் சுவாமி' என நரசிம்ம அப்பாசாமி ஜமீன்தார் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு பட்டணப் பிரவேசத்துக்கு தயாரானார்கள்.

6.4.1936
அன்று சித்ரா பவுர்ணமி.

விவசாயிகள் ஒன்று கூடினர். பேப்பர் சுவாமிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இளையரசனேந்தல் ஜமீன்தார் சுவாமிக்கு பாத பூஜையை நடத்தினார்.

பின்னர் சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட காரில் அமரச் செய்து இலஞ்சி ஊரைச்சுற்றி பட்டணப்பிரவேசம் கூட்டி வந்தனர்.

வானம் எப்போதும் போலவே காணப்பட்டது. கரும்மேகம் கூடவில்லை. மழை வருமா?. பலருக்கு சந்தேகம் எழுந்து விட்டது.

ஆனால் விவசாயிகளுக்கு சித்தர் பெரும் மகனார் மீது அளவில்லாத பக்தியும், நம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக மழை வரும் என்ற நம்பிக்கையிலேயே ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

ஊர்வலம் பெருந்தெருவில் இருந்து கீழ் திசையில், மேற்கு பார்த்த பிள்ளையார் கோவில் அருகே வந்தது. அதன் பின் அங்கிருந்து ஜமீன்தாரின் பங்களாவின் தலைவாசலுக்குச் சென்றது.

திடீரென மிகப்பெரும் ஓசையுடன் கூடிய இடியோடும், மின்னலோடும் பலத்த மழை இடைவிடாது பெய்தது. மழை என்றால் மழை.. அப்படியொரு மழை. அதுவரை அப்படியொரு மழையை யாரும் பார்த்திருக்கவே இயலாது. ஒவ்வொரு துளியும் பனிக்கட்டி போல வெளியே நின்றவர்கள் மீது விழுந்தது. பட்டணப் பிரவேசத்தோடு வந்தவர்கள் அருகிலுள்ள வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.

சுவாமி தன்னோடு வந்தவர்களை அழைத்தார். ‘இங்கே வாங்கடா.. அன்னைக்கே சொன்னேனே.. நினைவு இருக்கிறதா? இடி இடிக்க மழை பெய்ய... அந்த பாடலை போல மழை பெய்ததா. நாளைக்கு காலையிலேயே போய் பாருடா.. குளம் எல்லாம் எப்படி நிறைஞ்சு இருக்குன்னு சொல்லுங்க' என்றார்.

மறுநாள் காலையில் இலஞ்சியை சுற்றியுள்ள அனைத்து குளங்களும் தண்ணீரால் தளும்பிக் காணப்பட்டன. இதனால் இலஞ்சி மக்களுக்கு பேப்பர் சுவாமிகள் மீது அளவற்ற அன்பும் பக்தியும் ஏற்பட்டது.


ஆண் வாரிசு:


ளையரசனேந்தலின் ஜமீனில் மூத்தவர் சங்கர நாராயண அப்பாசாமி ஆவார். இளையவர் நரசிம்ம அப்பாசாமி. இருவருக்குமே பெண் குழந்தைகள் இருந்தனர். ஆண் வாரிசுகள் இல்லை.

இலஞ்சியில் சுவாமியை நேரில் பார்த்து வணங்கினார்கள் ஜமீன்தார்கள். சுவாமிகள் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.  



ஆண் வாரிசு இல்லாத கவலையில், பேப்பர் சுவாமியைப் பார்ப்பதற்காக ஜமீன்தார் இருவரும் சென்றிருந்தனர். அவர்களைப் பார்த்த பேப்பர் சுவாமி, ‘என்னப்பா... ஏதோ எதிர்பார்த்து வந்திருக்கிற போல' என்று கேட்டார்.

மூத்த ஜமீன்தார் கண்கலங்க நின்றார். அவரால் பேச முடியவில்லை. நா தழுதழுத்தது.

சுவாமி அண்ணனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கும் ஆண் வாரிசு இல்லை. ஜமீன் அரண்மனையில் ஆண் வாரிசு இல்லன்னா, எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்கு தெரியும்...' இளையவர்தான் பேசினார்.

சிரித்தார் சுவாமி..

இரண்டு கடுக்காய்களை எடுத்தார். ஜமீன்தார் கைகளில் கொடுத்தார். இங்க பாருப்பா... உனக்கு சிம்ம லக்னத்தில இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும்..' என்றார்.

சந்தோஷமாக நரசிம்ம அப்பாசாமி அதை கையில் பெற்றுக்கொண்டார்.

சுவாமி... அண்ணனுக்கு' என்று நீட்டி இழுத்தார்.

சுவாமி சிரித்தார்.. உனக்குத் தான் இரண்டு ஆண் குழந்தை கிடைக்கும் டா...' என்றார்.

நரசிம்ம அப்பாசாமிக்கு பெண் குழந்தை பிறந்து, சுமார் 16 வருடங்கள் கடந்து விட்டது. பிறகு எப்படி குழந்தை பிறக்கும் என்று பலரும் கேள்வி கேட்டனர்.

ஆனால் ஜமீன்தார் மட்டும் நம்பிக்கையோடு இருந்தார்.

காலங்கள் கடந்தன. சுவாமிகள் திருவாக்கின் படியே இளையரசேனந்தல் ஜமீன்தார் நரசிம்ம அப்பாசாமிக்கு சிம்ம லக்னத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் ஜமீன்தார். தனது குழந்தைகளுக்கு பெரிய பேப்பர், சின்ன பேப்பர் என பெயர் வைத்தார். அதன் பிறகு சுவாமிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் மிகவும் நெருக்கம் ஏற்பட்டது.



மூன்று இடத்தில் ஓரே நேரத்தில் சுவாமியா?

1941-ம் ஆண்டு.இளையரசனேந்தல் ஜமீன்தார் தனது மகள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பேப்பர் சுவாமியை அழைத்துவர காரில் இலஞ்சிக்கு வந்தார்.

பேப்பர் சுவாமி இலஞ்சி .கே.எஸ். பிள்ளை என்பவர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

ஜமீன்தார், சுவாமி! எனது மகள் திருமணத்தை நடத்தி வைக்க நீங்கள் தான் வரவேண்டும்' என்றார்.

சுவாமி சிரித்துக்கொண்டே சரி... நாளைக்கு காலையில வாரேன். நீ... குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு வா. நான் அங்கு உனக்காகக் காத்திருக்கேன்' என்றார்.

ஜமீன்தாருக்கு சந்தோஷம். .கே.எஸ்.பிள்ளைக்கோ வருத்தம். நமது வீட்டு விசேஷத்தை விட்டு விட்டு சுவாமி கிளம்புவேன் என்கிறாரே..'

இரண்டு பேர் முகத்தினையும் பேப்பர் சுவாமி கவனித்தார்.

மறுநாள் காருடன் வந்தார் ஜமீன்தார். அங்கிருந்த சுவாமியை காரில் ஏற்றிக்கொண்டு இளையரசனேந்தல் நோக்கி விரைந்தார்.

இதைக் கேள்விப்பட்ட .கே.எஸ்.பிள்ளை. தனக்கு தெரியாமல் தனது வீட்டை விட்டு சுவாமி வெளியே சென்று இருக்க முடியாதே. எப்படி நம் வீட்டை விட்டு சுவாமி கிளம்பினார் என பலவித யோசனையுடன் தனது வீட்டில் பேப்பர் சுவாமி தங்கி இருந்த அறைக்கு சென்றார்.

அங்கே சுவாமி பூஜை செய்ய ஆயத்தமாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ந்து விட்டார் .கே.எஸ்.பிள்ளை.

அப்படியென்றால் ஜமீன்தார் அழைத்து கொண்டு சென்றது யாரை? என்று குழம்பிப் போனார்.

குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு ஒருவரை அனுப்பி, ஜமீன்தாருடன் சுவாமி சென்றாரா? என்று விசாரித்து வரச் சொன்னார்.

அந்த நபர் அங்கு சென்றுவிட்டு திரும்பி வந்து சுவாமி எங்கேயும் செல்லவில்லை. குன்னக்குடி பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து கொண்டிருக்கிறார்' என்றார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்த பிள்ளை, வீட்டிற்குள் நுழைந்தபோது, என்ன பிள்ளை... அதிர்ச்சியா இருக்கா?' என சிரித்துக்கொண்டே கேட்டார், பேப்பர் சுவாமி.

அந்த நேரத்தில் பிள்ளை வீட்டில் இருந்த போன் அலறியது.

அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே போனை எடுத்தார் பிள்ளை.

பிள்ளை மன்னிச்சிடுங்க! உங்க வீட்டு நிகழ்ச்சிக்கு இடையிலேயே பேப்பர் சுவாமியை எனது மகள் திருமணத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன். மன்னிச்சுடுங்க..' என்றார் ஜமீன்தார்.

சுவாமி.. இளையரசனேந்தலிலுமா? அப்படியென்றால் மூன்று இடத்தில் சுவாமியா? என்று அதிர்ந்து போய் விட்டார் பிள்ளை.

அந்த காலத்தில் டிரங்கால் புக் செய்து பேசவேண்டும். அல்லது ஏதாவது டாக்ஸி புக் செய்து அதன் மூலம் சென்று தான் மற்ற ஊரைப்பற்றி அறியமுடியும். இலஞ்சியில் இருந்து இளையரசனேந்தல் பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

செய்தி அலைவரிசை கூட ஓரிடத்தில் இருந்து மறு இடத்துக்கு செல்ல நேரம் பிடிக்கும். அப்படியிருக்கும் போது ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் இருந்த சித்தர் மிகவும் பெருமைக்குரியவர்தானே. இந்த செய்தி ஊரெங்கும் பரவியது. பக்கத்தில் உள்ள கிராம மக்கள் மட்டுல்லாமல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமே அதிசயமாய் பேசியது. அந்தக் காலத்தில் சுதேச மித்திரன் பத்திரிகையில் இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள்.

இளையரசனேந்தல் அற்புத செயல்கள்:


1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேப்பர் சுவாமிகளை இளையரசனேந்தல் அரண்மனைக்கே கூட்டி வந்து விட்டனர் ஜமீன்தார்கள். அங்கேயும் அவரது அற்புத செயல்கள் தொடர்ந்தது.

அரண்மனையில் பணியாற்றியவர் முத்தையா பிள்ளை மகன் வையாபுரி பிள்ளை. இவர் 1950-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியிருந்தார்.

அவருடைய தேர்வை பலநாளுக்கு முன்பே கணித்தார் பேப்பர் சுவாமி.

எப்படி?

பேப்பர் சுவாமியிடம் முத்தையா பிள்ளை என் மகன் தேர்வில் வெற்றி பெற்று விடுவானா?' என்று கேட்டார்.

உடனே பேப்பர் சுவாமி, அங்கே கிடந்த ஒரு பழைய பேப்பரை எடுத்துக் காட்டினார். அதில் 1949-ல் நடந்த ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியாகியிருந்தது. அந்த பேப்பரில் சுவாமி குறிப்பிட்டு காட்டிய இடத்தில் வையாபுரி பிள்ளையின் பதிவெண் இருந்தது.

முத்தையா பிள்ளைக்கு கொஞ்சம் சந்தேகம் தான். இது 1949-ம் ஆண்டு பேப்பர் அல்லவா?. இந்த பதிவெண்ணில் அந்த வருடம் தேர்வானவர் அல்லவா இருப்பார் என்று நினைத்தார். தேர்வு முடிவு வந்த போது, அவர் காட்டிய படியே பதிவெண், அதே பக்கத்தில் அதே பாராவில் வெளியாகி இருந்தது.

ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார் முத்தையா பிள்ளை. அதன் பின் பேப்பர் சுவாமியின் தீவிர பக்தராக மாறி விட்டனர், தந்தையும் மகனும்.


சிறுவன் உயிர் பெற்று எழுந்தது:


இலஞ்சியில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தெருவில் முத்துக்கோனார் என்பவர் வசித்து வந்தார். சுப்பையா என்ற அவரது இரண்டு வயது மகன் இறந்து விட்டதில் வீடும் ஊரும் சோகத்தில் மூழ்கியது. இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடும் நடந்து வந்தன. அவ்வேளையில் அங்கு வந்த பேப்பர் சுவாமி, முத்து கோனாரிடம் எனக்கு கஞ்சி தாப்பா என்றார்.

சோகத்தினை அடக்கிக்கொண்டு அவருக்கு கஞ்சி கொடுத்தார். அப்போது மகனை இழந்த வருத்தத்தில் அழுது துடித்தார்.

உடனே சுவாமி என்னப்பா.. மகன் இறந்து விட்டான் என்று அழுகிறாயா? இந்த உருண்டை சோற்றை அவன் வாயில் தினி. உயிர் வந்து விடும். அவனுக்கு நூறு வயதுக்கு மேல் ஒரு வாய் சோறு கொடுக்கும் போது தான் உயிர் போகும் என்றார்.

அதுபோலவே மகன் வாயில் சோறு உருண்டையை வைத்ததும், அந்தச் சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். தற்போது 100 வயதை தாண்டிய நிலையில் இருக்கும் சுப்பையா, தனது வீட்டில் தினமும் பேப்பர் சுவாமியின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார்.


மவுன விரதம்:


சுவாமியின் அற்புதங்களோடு காலங்கள் பல கடந்தது. சுவாமி திடீரென்று அரண்மனையின் ஒரு பகுதியில் அமர்ந்து மவுன விரதம் இருக்கத் தொடங்கினார். 6 வருடம் யாரிடமும் பேசவில்லை. சுவாமியின் தவத்திற்கு பாதுகாவலாக ஜமீன்தார் அருகிலேயே இருந்தார். இரவு பகலாக கண்விழித்து அரண்மனை காவலாளிகளும் அவருக்கு சேவகம் செய்தனர்.

ஜீவ சமாதி:


ஒரு நாள்.. சுவாமி ஜீவ சமாதி ஆக தயாரானார். இதையறிந்த அவரது பக்தர்கள், சுவாமி நம்மைவிட்டு பிரிய போகிறார். அதை நாம் எப்படி தாங்க போகிறோம் என்று பரிதவித்தனர். ஆனால் பேப்பர் சுவாமி தன் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. 14.5.1956-ம் ஆண்டு கொல்லம் ஆண்டு 1131 துர்முகி வருடம் சித்திரை மாதம் 31-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 1.30 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமி ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி நிலை அடையும் போது, ஏராளமான சீடர்கள் அங்கு கூடியிருந்தனர்.

குரு பூஜை:





சமாதி அமைக்கும் பணியை கோவில்பட்டி முக்தானந்தா சுவாமிகள் மடத்தினர் முன்னின்று நடத்தினர். சுவாமிகள் ஜீவ சமாதி ஆனது முதல் இன்று வரை ஆண்டு தோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தர்களோடு இளையரசனேந்தல் ஜமீன்தார் குடும்பத்தினர், குரு பூஜையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். சுவாமியின் சீடர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் பேப்பர் சுவாமி தனது சீடர்களையும், தன்னையும் நம்பி வருவோருக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஜீவ சமாதி அடைந்த பிறகும் கூட இளையரசனேந்தல் ஜமீனில் பல அற்புதங்களை பேப்பர் சுவாமி செய்து வருகிறார்.

FOR FURTHER READING:

Post Your Comments Below. It will be published after Moderation.